சென்னை: பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனை அவதூறாக பேசியதாக, நாஞ்சில் சம்பத் மீது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தொடரப்பட்ட 11 வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக அம்மா அணியின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகிக்கும் நாஞ்சில் சம்பத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனை விமர்சனம் செய்ததாக அக்கட்சியின் நிர்வாகி ஆனந்த், பல்லாவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு உட்பட, தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் 11 வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தனது பேச்சுரிமையைப் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இந்த 11 வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதித்து, வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.