திருவண்ணாமலையில் 6 மாத காலத்தில் கிரிவலப்பாதை விரிவாக்கப்பணி முடிவடையும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள் அதிகளவில் வருவதால், கிரிவலப்பாதையை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்தப் பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நெடுஞ்சாலைத்துறை தொடங்கியது.
அப்போது, கிரிவலப்பாதையில் செழித்திருந்த பழமையான மரங்கள் வேருடன் அகற்றப்பட்டன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை அகற்றுவதற்கான முயற்சியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரித்தது.
மேலும், கிரிவலப்பாதை விரிவாக்கப்பணிக்கு இடைக்கால தடை விதித்தது. இதை ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இதனால், சுமார் ஒரு ஆண்டாக கிரிவலப்பாதை விரிவாக்கப்பணி நடைபெறாமல் முடங்கியது.
இந்நிலையில், கிரிவலப்பாதை ஆய்வுக்குழுவினர் மூன்று முறை நேரில் ஆய்வு நடத்தினர். பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது, மரங்களை வெட்டாமல் கிரிவலப்பாதையை அகலப்படுத்த வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் குழுவின் அறிக்கை சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து
பல்வேறு நிபந்தனைகளுடன் கிரிவலப்பாதை விரிவாக்க பணிக்கு விதித்திருந்த இடைக்கால தடையை விலக்குவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது. மேலும், கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்ய ஒரு மரத்தைக் கூட வெட்டக் கூடாது, நீர் நிலைகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி 1 மரத்தைக்கூட வெட்டாமல் விரிவாக்கப்பணி நடைபெறும் என ஆட்சியர் உறுதியளித்துள்ளார். கிரிவலப்பாதையில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.