புதுச்சேரி: திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற ரஜினிகாந்தோடு இணைந்து கமலஹாசன் பணியாற்ற வேண்டுமென காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.
புதுவையில் சனிக்கிழமை இரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்த் ஏற்கனவே தான் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போகிறேன் என்பதை சூசகமாக ஏற்கனவே சொல்லிவிட்டார். அவர் சொல்லி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
தற்போது ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான அனைத்து அடிப்படை வேலைகளும் ஓசை இல்லாமல் நடைபெற்றுவருகிறது. அவர் ஏன் அரசியலுக்கு வருகிறார், என்ன செய்ய போகிறார் என்பதை திருச்சியில் நடைபெற்ற காந்திய மக்கள் இயக்க பொது கூட்டத்தில் நான் விளக்கியிருக்கிறேன். இவையெல்லாம் நடந்த முடிந்த பிறகு இப்பொழுது கமலஹாசன் அவர்கள் தான் ஒரு கட்சியை தொடங்கப்போவதாக சொல்கிறார். ஆனால் என்னை பொருத்துவரையில் ரஜினிகாந்தோடு இணைந்து கமலஹாசன் பணியாற்றினால் அது சிறப்பாக இருக்கும்.
அதில் ஒன்றும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கட்சி, கொடி என்று பிரிந்திருந்தால் நிச்சயமாக அடுத்து அது திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்பைத்தான் உருவாக்கும். இரண்டு திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்கவும், இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, தமிழகத்தில் மாற்று அரசியலை முன்னெடுக்கவும் ரஜிகாந்த்தோடு கமலஹாசன் கைகோர்த்து நிற்பது எல்லா வகையிலும் வரவேற்கத்தக்கது .
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், தனி கட்சி தொடங்குவதும், தேர்தல் காலத்தில் நிற்பதும், ஆட்சியை நோக்கி செல்வதும் உறுதியான செய்தி. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றார் தமிழருவி மணியன்.