திருவனந்தபுரம்: ''பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை புரிந்து கொள்ள விரும்பினால், முதல்வர் பினராயி விஜயன் சேலை கட்டிக் கொண்டு நடக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், கே.ஆர்.கவுரியம்மா கூறினார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபையின், வைர விழா கொண்டாட்டம் நடக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, கேரள முதல் சட்டசபையில், உறுப்பினர்களாக இருந்த, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள், கே.ஆர்.கவுரியம்மா, சந்திரசேகரன் ஆகியோருக்கு, திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடந்தது.
உடல் நிலை காரணமாக, விழாவில், சந்திரசேகரன் பங்கேற்கவில்லை. விழாவில், முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களும் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில், 98 வயதுடைய கே. ஆர். கவுரியம்மா பேசியதாவது: நான், எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, இரவு, 10 மணிக்கு கூட, தனியாக நடந்து செல்வேன். ஆனால், இன்று, நிலைமை மாறிவிட்டது, இப்போது, பெண்களால், பகலில் கூட, தனியாக நடந்து செல்ல முடியவில்லை. முதல்வர் பினராயி விஜயன், சேலை கட்டிக்கொண்டு சாலையில் நடந்து சென்றால் தான், பெண்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, ஜனநாயகத்துக்கே ஆபத்து என்று கூறினார்.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கவுரியம்மா, கேரளாவில், 1957ல் இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார். 1967, 1980 மற்றும் 1987-ல் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
1994-ல், மார்க்.கம்யூனிஸ்ட் விலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், 'ஜனாதிபதியா சம்ரக் ஷணர் சமிதி' என்ற கட்சியை துவக்கினார், கேரளாவில், 2001 - 2006 வரை இருந்த, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும் அமைச்சராக இருந்தார்.