புதுதில்லி: தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை, அங்கு நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியதால் பரபரப்பு நிலவியது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்வசமாக உயிர்தப்பினர்.
துபாயில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையத்திற்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று வந்தடைந்தது. அப்போது, விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது விமானத்தின் இறக்கை மோதியதில், விமானம் லேசாக குலுங்கியதால் விமானத்தில் பயணித்த 8 விமானிகள் மற்றும் பயணிகள் 125 பேரும் அதிர்ச்சியடைந்தனர். இதில் விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விமானிகள் மற்றும் பயணிகள் என அனைவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்புடன் வெளியேறினர். பி737 விமானத்தை விமான நிறுவன தொழில்நுட்ப குழுவினர் பரிசோதனை செய்து வருவதாக கூறினார்.
இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.