ஹைதராபாத்: பைக் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்த தெலங்கானா மாநில பெண்கள் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பி உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நான்கு பெண்கள் தெலங்கானா சுற்றுலா வளர்ச்சிகழகம் சார்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பைக் மூலம் சுற்றுலா சென்றனர்.
நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக மணிப்பூர் மாநில எல்லைவழியே மியான்மர் நாட்டிற்கு சென்றவர்கள், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மற்றும் வங்கதேசம் என மொத்தம் 17 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரையில் சுற்றுப்பயணம் செய்து வந்துள்ளனர்.
இது குறித்து தெலுங்கான மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்தை சேர்ந்த இயக்குநர் மனோகர் கூறுகையில், பெண்களின் பயணத்தின் போது பல்வேறு தர மக்களை சந்தித்து தெலங்கானா மாநில சற்றுலா குறித்தும் இந்தியா குறித்தும் விளக்கியதாகவும் கூறினார். இதுவரை வேறு எந்த மாநிலமும் செய்யாத தனித்துவமான விஜயத்திற்காக பெண்கள் மிகவும் சந்தோசமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்த பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் தனது பயணம் குறித்து கூறுகையில், இந்த பயணம் என்னை புதிதாக்குவதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாக இருந்தது, நான் எந்த சவாலும் எடுக்க முடியும் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறினார்.
சாந்தி சூசன் மாநில காவல் துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.