ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் லால் சிங் மற்றும் வர்த்தக அமைச்சர் சந்தர் பிரகாஷ் ஆகியோரின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தாரா முதல்வர் மெஹபூபா முஃப்தி.
கதுவா மாவட்டத்தின் ரசானா கிராமத்தில் 8 வயது முஸ்லீம் சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி 10}ஆம் தேதி காணாமல் போன நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு அவரின் வீட்டருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்த நிலையில், அச்சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எதிர்ப்புகள் வலுக்கவே சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, 8 பேரை கைது செய்தது. அதில், ஆதாரங்களை அழிக்க முயன்றதாக 2 காவல்துறை அதிகாரிகளும், ஒரு காவலரும் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவு நீதிமன்றம் அமைக்க முதல்வர் மெஹபூபா தற்போது வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 காவலர்களையும் பணி நீக்கம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே சிறப்பு விசாரணை குழுவினர் கைது நடவடிக்கையை கண்டித்தும், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக மாநில பாஜகவினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மாநில வனத்துறை அமைச்சர் லால் சிங் மற்றும் வர்த்தக அமைச்சர் சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாகவைச் சேர்ந்த 2 அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவில் விலகுவதாக கூறி ராஜிநாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் சத் சர்மா, முதல்வர் மெஹபூபா முஃப்திக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இரு அமைச்சர்களின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட முதல்வர் மெஹபூபா முஃப்தி, அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.
இரு அமைச்சர்களின் ராஜிநாமாவை அடுத்து, மாநிலத்தில் அமைச்சர்கள் எண்ணிக்கை 22- ஆக குறைந்துள்ளது. அமைச்சர்களின் பட்டியலில் 3 இடங்கள் காலியாக உள்ளன.
கதுவா வழக்கில் ஜம்மு மக்களின் ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்திருந்த மெஹபூபா முஃப்தி, "கதுவா வழக்கில் நிகரில்லா ஆதரவு வழங்கி வருவதற்கும், மதவாத சக்திகளின் தலையீட்டை நிராகரித்ததற்கும் ஜம்மு மக்களுக்கு பாராட்டுகள்' தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.