மதுரை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் துணைவேந்தர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் கலை - அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி என்ற உதவிப் பேராசிரியர், சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய உதவிப் பேராசிரியை, சில பெரிய மனிதர்களின் கைப்பாவையாக மாறி, மாணவிகளை சாக்கடையில் தள்ள முயன்றிருப்பது கண்டித்தும் பேராசிரியை நிர்மலாவை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்குவதுடன், அவரைக் கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் இணைந்து கல்லூரி வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் துணைவேந்தர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.