பெங்களூரு: மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதியதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் பாதுகாப்பு காவலர் உயிர் தப்பினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சராக, பாஜக எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே, நேற்று இரவு கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டம் ராண்பென்னூர் தாலுக்காவில் உள்ள ஹலகேரி என்ற பகுதி அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.
இரவு 11.30 மணியளவில் ஹெக்டே சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் வந்துகொண்டிருந்த லாரி, திடீரென அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பாதுகாப்பு வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக உயிர்சேதம் எதுவுமின்றி லேசான காயங்களுடன் பாதுகாப்பு காவலர் உயிர் தப்பினார்.
இது குறித்து மத்திய இணையமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே தனது டுவிட்டர் பக்கத்தில் லாரி மற்றும் அதன் ஓட்டுநர் புகைப்படத்துடன் சம்பவங்களை பதிவிட்டுள்ளார். அதில், ஹெக்டே, இந்த சம்பவம் ஒரு விபத்து போல தெரியவில்லை. ஓட்டுநர் திட்டமிட்டே எங்கள் வாகனத்தின் மீது மோத முயற்சித்துள்ளார் என்றும் எனது உயிரை குறிவைத்து நடத்தப்பட்ட சம்பவமாக இருக்க கூடும் என தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு வாகனத்தின் மீது லாரி மோதியுள்ளது. நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்த எனது கார், லாரி மோதுவதற்கு முன்பே கடந்து விட்டது. இந்த விபத்து சம்பவத்திற்கு பின்னால், மிகப்பெரிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் அதனை காவல்துறை உரிய விசாரணை செய்து கண்டுபிடிக்கும் என தான் நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
ஆனால், துரதிருஷ்டவசமாக, எங்கள் பின்னால் வந்துகொண்டிருந்த பாதுகாப்பு (எஸ்கார்ட்) வாகனம் மீது மோதியது. இதில் பாதுகாப்பு ஊழியர்களில் ஒருவர் தோள்பட்டை எலும்பு முறிவுடன் பலத்த காயமடைந்தார். உள்ளூர் மக்களால் நாசர் என்றழைக்கப்படும் லாரி ஓட்டுநர் பிடிபட்டுள்ளார். அவர் பிடிபட்டபோது எந்தவொரு மதுபானங்களும் அருந்தாமல் சுய நினைவோடு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.