புதுதில்லி: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத் தேர்வுக்கான கேள்வித் தாளில் பிழை இருந்ததை அடுத்து, மாணவர்களுக்கு சலுகையாக 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலத் தேர்வு கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கேள்வித் தாளில் உள்ள 2 மதிப்பெண்களுக்கான பிரிவு- ஏ-ன் மூன்றாவது கேள்வியில் எழுத்துப் பிழை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதுதொடர்பாக சில ஆசிரியர்களும், மாணவர்களும் சிபிஎஸ்இ தரப்பிடம் முறையிட்டனர். சிபிஎஸ்இ தரப்பில் அவர்கள் இணையவழி மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.
சிபிஎஸ்இ அதை கவனத்தில் கொண்ட நிலையில், தட்டச்சு பிழை காரணமாக மாணவர்கள் எந்தவொரு இடையூறையும் சந்திக்கக் கூடாது என்பதே சிபிஎஸ்இ கொள்கையாகும். எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தேர்வை எதிர்கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்துள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை பரிசீலித்த சிபிஎஸ்இ நிர்வாகம், எழுத்துப் பிழை ஏற்பட்ட குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மே கடைசி வாரத்தில் 2018 பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.