ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் படித்த ராமேஸ்வரம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மின்கட்டணம் செலுத்தாதால், மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையில், ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்தார். தற்போது இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியின் மின்கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் பலமுறை கூறியும், மின்கட்டணம் செலுத்தப்படாமலே இருந்து வந்துள்ளது.
இதையடுத்து நேற்று வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியிடம் தகவல் கூறிவிட்டு, மின்இணைப்பை துண்டித்து சென்றுள்ளனர்.
பின்னர், இதுகுறித்து பள்ளியின் மேலாண்மைக் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளிடம், ஒரு வார காலத்திற்குள் மின்கட்டணத்தை செலுத்திவிடுவதாக அளித்த உத்தரவாதத்தை அடுத்து, நேற்று மாலை மீண்டும் மின்இணைப்பு வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் பதவியேற்ற பின்னர், ஒருமுறை இந்த பள்ளிக்கு வருகை தந்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பயின்ற பள்ளியிலே, மின்கட்டணம் செலுத்தாமல் கல்வித்துறை அதிகாரிகள் தாமதப்படுத்தபடுத்தி வந்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.