போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமனறம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் உள்பட 9 பேர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரு.2 கோடியே 46 லட்சம் கடன் பெற்றனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் 9 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது கார்த்திகேயன் ஆஜராகததால், அவர் மீதான வழக்கை தனியாக எடுத்து நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் மற்றவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே சிறை தண்டனை வழங்கியது.
இந்த நிலையில் தன் மீதான வழக்கு விசாரணைக்காக கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள 11 ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் எம்.வி.தினகர் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹர், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த அபராத தொகையில் ரூ.20 லட்சத்தை வங்கிக்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.