மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலையில் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் காலை 9.05 இனிதே நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை காலை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.
மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த 18-ஆம் தேதி புதன்கிழமை தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
ஒன்பதாம் நாள் விழாவாக வியாழக்கிழமை காலை மரவர்ணச் சப்பரத்தில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கைராஜா மண்டகப்படியில் எழுந்தருளினர். மாலை சுவாமி பிரியாவிடையுடனும், தனியாக அம்மனும் இந்திர விமானத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வடக்கு- கீழமாசி வீதி சந்திப்பில் உள்ள லாலாஸ்ரீ ரெங்க சத்திரம் மண்டகப்படிமுன்பு எழுந்தருளினார். அங்கு திக்விஜயம் பூஜைகள் நடைபெற்றன.
மீனாட்சி திருக்கல்யாணம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் குவிந்துள்ளனர்.