காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தற்கொலைப்படையினர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள ஷஷ்தாராக் பகுதியில் உள்ள உளவுத்துறை கட்டடங்களுக்கு அருகில் தற்கொலைப்படையினரால் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பல பத்திரிகையாளர்களும் காயமடைந்துள்ளனர்.
கடந்த வாரம் நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காபூல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தற்கொலைப்படை குண்டுவெடிப்பு என்பதை உறுதி செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவொரு தனிப்பட்ட அல்லது பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தலைநகர் காபூலில் கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.