புதுதில்லி: தில்லியில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் 72-வது சுதந்திர தினம் வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது தில்லியில் மிகப்பெரும் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவுடன் தில்லியில் சுதந்திர தினத்தன்று இரு இடங்களில் தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு 5 பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது.
சுதந்திர தினத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருக்கும் தகவல் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தில்லியில் முக்கியமான இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவுக்காக தில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கூடும் பொது இடங்கள், குறிப்பாக போக்குவரத்து நிலையங்கள், கோவில்கள், தேவாலயங்கள், விமான நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தில்லி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து தில்லி போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் தெரிவித்தார்.