சென்னை: உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் எங்களுடனே இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள நினைவு கடிதத்தில், உலகமே உங்களை கலைஞர் என்று அழைத்தாலும், நான் உங்களை 'அண்ணா' என்று வாஞ்சையோடு அழைத்து உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி வியப்பதாகவும், விம்முகிறேன்.
தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு! என்பதன் அர்த்தத்தை 'உழைப்பு' என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்றே தலைவரே!
அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை. ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில் இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ! என்று என்னும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே!
உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடனேயே இருக்கும் உங்களை வணங்குகிறேன்.
உங்களின் நினைவாக என்றென்றும்...
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
என்ற உங்கள் வாசகத்துடன்.
இப்படிக்கு உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்.
என்று கருணாநிதிக்கு எழுதிய நினைவு கடிதத்தில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.