புதுதில்லி: பாவ மன்னிப்பு கேட்கும் முறையை சர்ச்சில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என கூறி சர்ச்சையில் சிக்கியிருந்தவர் தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக ரேகா சர்மா(54) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மகளிர் ஆணைய தலைவராக இருந்த வந்த லலிதா குமாரமங்களம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்தநிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து வந்த ரேகா சர்மா (54) கூடுதலாக இந்த பொறுப்பை வகித்து வந்தார். இந்தநிலையில் நேற்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக ரேகா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹரியானாவைச் சேர்ந்தவர்.
ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த ரேகா சர்மா, நாடு முழுவதிலும் உள்ள பல மனநல நிறுவனங்களை பார்வையிட்டார், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பெண்களுடன் பேசியுள்ளார்.
இது குறித்து ரேகா சர்மா கூறுகையில், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது கவுரமாக கருதுகிறேன். கடமை உணர்வுடன் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். "பெண்களுக்கு தேசிய அரசியல் அமைப்பு மற்றும் சட்ட உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் குறைகளை சரி செய்யவதற்கு உதவுதற்கும் தேசிய மகளிர் ஆணையம் உண்மையாகவே செயல்படும்" என கூறினார்.
பாவ மன்னிப்பு பெண்களை மட்டும் பாதிக்காது ஆண்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். எனவே, பாவ மன்னிப்பு கேட்கும் முறையை சர்ச்சில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என ரேகா சர்மா கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.