புதுதில்லி: கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளா மீது கடந்த 2 நாட்களாக எந்த மேலடுக்கு சுழற்சியும் இல்லை. அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் மழையின் தாக்கம் படிப்படியாக குறையும் வாய்ப்பு உள்ளது.
வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. அதன் பிறகு கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மாநிலங்களில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும் என்றும் தென்மேற்கு அரபிக்கடல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.