புதுதில்லி: பாஜக மூத்த தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சாராது பிரதமர் பதவியை முழுமையாக நிறைவு செய்த முதல் நபர் என்ற பெருமைக்கு உரியவருமான வாஜ்பாய் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வாஜ்பாய் உடல் பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.05 மணியளவில் காலமானார்.
வாஜ்பாய் மறைவை அடுத்து 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது. வெள்ளிக்கிழமை மத்திய அரசு சார்பில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, பாஜக தமிழக தலைவர் தமிழிசை, கேரள ஆளுநர் சதாசிவம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை அமைச்சர் ஜெயகுமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும், பல மாநில முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் அஞ்சலி செலுத்த வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணா மேனன் பார்க்கில் உள்ள வாஜ்பாய் இல்லத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் வாஜ்பாய் உடல் இன்று காலை 9.30 மணியளவில் பண்டிட்தீ்ன்தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பிற்பகல் 1 மணி வரை பாஜக தலைமையகத்தில் வைக்கப்படுகிறது. அங்கு பொதுமக்கள், மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.