புதுதில்லி: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓவின் தலைவராக விஞ்ஞானி சத்தீஷ் ரெட்டி இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ 1980-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நாட்டின் முப்படைகளுக்கு தேவையான தளவாடங்களின் விஞ்ஞான அம்சங்கள் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதுடன், அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பான திட்டங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைவராக இருந்த எஸ்.கிறிஸ்டோபரின் பதவிக்காலம் ஒரு ஆண்டு நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து கடந்த 3 மாதங்களாக காலியாக இருந்த நிலையில், பாதுகாப்பு துறை செயலாளர் சஞ்சய் மித்ராவுக்கு, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவியல் ஆலோசகராக இருந்து வரும் சத்தீஷ் ரெட்டி, டிஆர்டிஓ-வின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் இருந்து இவர் இரண்டாண்டுகள் இந்த பதவியை வகிப்பார் என்றும் இந்நிறுவனத்தில் செயலாளராகவும் இருப்பார் என அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.