கொச்சி: கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை முதல் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கொச்சி விமான நிலையத்திலும் வெள்ளம் புகுந்தது. விமான ஓடுதளத்திலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய சர்வதேச விமானங்கள், கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
மேலும், கடந்த 14-ஆம் தேதி முதல் கொச்சி விமான நிலையம் ஐந்து நாள்களுக்கு கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இரண்டு சர்வதேச விமானங்கள் கோவைக்கு புதன்கிழமை திருப்பி அனுப்பப்பட்டது. தற்காலிகமாக கொச்சியில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை வெள்ளதால் கொச்சி விமான நிலையத்திற்கு ரூ.220 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே மழை குறைந்து வெள்ள நீர் குறைந்து வருவதையடுத்து இயல்பு திரும்பி வருகிறது. இந்நிலையில், கொச்சி சர்வதேச விமான நிலையம் நாளை புதன்கிழமை (ஆக 29) முதல் முழுமையான அளவில் இயங்கும் என்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.