கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் காலம் வந்துவிட்டது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

காங்கிரஸ் கலாச்சாரம் கார்நாடகாவுக்கு தேவையில்லை என்றும் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் காலம் வந்துவிட்டது என
கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் காலம் வந்துவிட்டது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பெங்களூரு: காங்கிரஸ் கலாச்சாரம் கார்நாடகாவுக்கு தேவையில்லை என்றும் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் காலம் வந்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா 85 நாள் பிரச்சார யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக பாஜக மேலிடத் தலைவர்கள் அமித் ஷா உள்ளிட்ட பலரும் கர்நாடகா வந்து சென்றனர். 

இந்நிலையில், இன்று கர்நாடகா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு பேலஸ் கிரவுண்டில் நடைபெற்ற பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "காங்கிரஸ் கலாச்சாரம் கார்நாடகாவுக்கு தேவையில்லை என்றும் கர்நாடகாவிலிருந்து வெளியேறும் வழியில் காங்கிரஸ் கட்சி நின்று கொண்டிருக்கிறது என்றார். 

முற்றுப்புள்ளி கர்நாடக காங்கிரஸுக்கு மட்டும் மல்ல, ஒட்டுமொத்த காங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத அரசியல், சமூகம், கலாச்சாரத்தை உருவாக்கப்போகிறோம்.

மக்களின் வாழ்வை எளிமையாக்கும் திட்டங்களையே மத்திய ஆளும் பாஜக அரசு அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தத் திட்டங்களால் கர்நாடக மக்களும் பயனடைந்துள்ளனர். ஆனால், கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியே நடைபெற்றால் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைத்திருக்கும் என்றார்.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய நிதி எதுவுமே கர்நாடக மக்களின் நலனுக்காகச் சென்றடையவில்லை. கர்நாடக அரசு மத்தியிலிருந்து 2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியைப் பெற்றிருக்கிறது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது வழங்கியதைவிட 118 சதவீதம் அதிகமானது என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். 

ஆனால், அவ்வளவு நிதி பெறப்பட்டதற்கு சமமான வளர்ச்சியை மாநிலத்தில் உங்களால் பார்க்க முடிந்ததா? என்று கூட்டத்தினரை நோக்கி கேட்டார். அதற்காகத்தான் இங்கே பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்கிறேன். அப்போதுதான் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல முடியும். 

நாடு முழுவதும் 4 கோடி வீடுகளில் மின்வசதி இல்லையென்றும், கர்நாடகத்தில் 7 லட்சம் வீடுகளில் மின்வசதி இல்லையென்றும் மோடி குறிப்பிட்டார். பெங்களூருவில் 50 லட்சம் பயணிகள் சுமார் 80 ரயில் நிலையங்கள் வாயிலாக பயன்பெற நாங்கள் 160 கி.மீ தூரத்திலான புறநகர் ரயில் சேவைக்கு ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதைக் குறிப்பிட்ட மோடி, இந்த ஆண்டு 9 ஆயிரம் கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை உருவாக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். 

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என்றவர் மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சரியான விலை கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. ஒரு விவசாயி மகனும், விவசாயிகளை இதயத்தில் தாங்குபவருமான எடியூரப்பா, கர்நாடகத்தின் முதல்வராக மாறினால், விவசாயிகளுக்கான திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படும். ஏன் என்றால் எடையூரப்பா மனதில் சிறந்த நலன்கள் உள்ளது.  

விவசாயிகளுக்காக செயல்படுத்த எண்ணற்ற திட்டங்களை வைத்துள்ளோம். பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை. அதாவது தக்காளி, வெங்காயம், உருளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ஆபரேஷன் க்ரீன் என்ற திட்டத்தைத் தொடக்கியுள்ளதாகவும், பால்வளத்தை பெருக்குவதில் அமுல் திட்டம் எப்படி முன்மாதிரியாக இருந்ததோ அதேபோல் ஆபரேஷன் க்ரீன் திட்டம் பழம், காய்கறி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கிராமப்புறங்களில் சிறந்த வசதிகள் செய்வதன்மூலம் மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்வதையும், நகர்ப்புற நெருக்கடியையும் தவிர்க்க முடியும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

உலகமே தொழில்வளம் குறித்து பேசிக் கொண்டிருக்கையில், கர்நாடகா மட்டும் கொலைகள் நடக்கும் வழிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. எதிர்ப்பாளர்கள் உயிரை துறக்க வேண்டும் என்றால் அது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது மாநில அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடியது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. கர்நாடகத்தில் ஆட்சியாளர்கள் அனைத்துத் திட்டங்களிலும் 10 சதவீதம் லஞ்சம் கேட்பதாகவும், அப்படி கொடுக்காவிட்டால் எந்தப் பணியையும் செய்ய முடியாது என்று குற்றஞ்சாட்டிய மோடி, கர்நாடகத்தில் இருந்து காங்கிரஸை வெளியேற்றும் நேரம் வந்து விட்டது என்றும், விரைவில் காங்கிரஸ் இல்லாத கர்நாடகம் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஒரு காங்கிரஸ் அமைச்சர் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கியதில் சிக்கினார். மணல் மாஃபியா, பணியிட மாறுதல் மாஃபியா, கட்டுமானத்துறைகளின் மாஃபியா என மாநிலத்தில் பல்வேறு ஊழல்கள் வேர் விட்டிருக்கின்றன. இரும்பு மேம்பாலத் திட்டத்தின் மூலம் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்ட நினைத்தனர். ஆனால், அதை தடுத்துவிட்டோம். அதன் பெருமை பாஜகவையே சேரும்.

நேற்று நமது இளம் இந்திய அணி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றுள்ளனர். அதற்கு பின்னணியில் முக்கிய காரணமாக இருப்பவர் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அவர் நாம் எப்படி நேர்மையாக கடமையாற்ற வேண்டும்; மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார். 

இதுதான் கர்நாடகாவின் கலாச்சாரமும்கூட. ஆனால், தற்போது ஆளுங்கட்சி இந்த கலாச்சாரத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது. எப்படி காங்கிரஸ் முத்தலாக் சட்டத்தை தடுத்து நிறுத்த முயல்கிறதோ அப்படித்தான் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டத்தையும் தடுத்து நிறுத்த முயல்கிறது. 

கர்நாடகா மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல நிச்சயம் கர்நாடக மக்கள் வரும் ஏப்ரல்-மே மாத சட்டப்பேரவைத் தேர்தலில் 224 தொகுதிகளிலும் பாஜகவை வெற்றியடையச் செய்வார்கள் என நம்புகிறேன்" எனக் கூறினார். 

பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com