திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாக வேலூரைச் சேர்ந்த அஜீத் என்ற திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேரை ஆந்திர போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள சம்பவம் மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜீத். இவர் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். கூடுதலாக, கார் டிரைவராக பகுதி நேரமாகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு பகுதி நேர ஓட்டுநராக திருப்பதி அருகே கரக்கம்பாடி சாலையில் காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் காரை வழி மறித்தனர். பின்னர், காரை ஓட்டி வந்த அஜீத்தையும், கர்நாடக மாநிலம் ஒஸ்கோட்டைச் சேர்ந்த இயேசு என்பவரையும் விசாரித்த போலீஸார், செம்மரம் கடத்துவதற்காக மங்களம் அருகே மறைத்து வைத்திருந்த 9 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி கைது செய்தனர். மேலும் ரங்கம்பேட்டை அருகே 7 செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து தனக்கும் செம்மரக்கட்டைகளை கடத்திய கும்பலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறிய அஜீத் தான் ஒரு மருத்துவ மாணவர், பகுதி நேர ஓட்டுநராக இருந்து வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கு வந்த செய்தியாளர்களை போலீஸார் விரட்டியுள்ளனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த திருப்பதி காவல் ஆய்வாளர் முரளியிடம், செம்மரக்கட்டை கும்பலை அனுப்பியவரை பிடிக்காமல், அஜீத்தை பிடித்தற்கு காரணம் கேட்டதற்கு, அவர் விளக்கம் அளிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே செம்மரம் கடத்தி செல்ல அஜித் மற்றும் இயேசுவை அனுப்பி வைத்த பிரபு என்பவரைப் பிடிக்காமல் கோட்டை விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்பாவி மருத்துவக் கல்லூரி மாணவர் அஜீத்தை போலீஸார் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ மாணவர் அஜீத் செம்மரம் கடத்த வந்ததாகக் கூறி ஆந்திர போலீஸார் கைது செய்திருப்பது மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.