சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை போரூரை அடுத்த மெளலிவாக்கம் மாதா நகரைச் சேர்ந்த பாபு, ஸ்ரீதேவி தம்பதியின் மகள் சிறுமி ஹாசினி. இவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் விவேகானந்தன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அத்துடன், அரசு தரப்பு சாட்சியங்களின் விசாரணை முடிவடைந்ததாக அரசு சிறப்பு வழக்குரைஞர் சீதாலட்சுமி தெரிவித்தார்.
இதையடுத்து, குற்றம் குறித்த விசாரணையையும் முடிவடைந்துள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் 19-ஆம் தேதி வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது.