சென்னை: தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யவுள்ள நிலையில், நாளை அமைச்சரவைக் கூட்டம் நடக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இதுவரை 6 அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை வியாழக்கிழமை (பிப்.15) கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கைகள், புதிய அறிவிப்புகள் மற்றும் நீட் விவகாரம், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்களின் விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும், 16-ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. படத்திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.