ஆப்பிரிக்க நாடான எத்தியாப்பியாவில் பிரதமர் ராஜிநாமா செய்துள்ளதை அடுத்து அங்கு நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் பிரதமராக ஐலிமரியாம் தேசாலென் கடந்த 2012-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் வளர்ச்சி சரியான விகிதத்தில் இல்லை என்றும் அரசின் நன்மைகள் சாதாரண மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என குற்றம்சாட்டி வந்த நிலையில், பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் வியாழக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கபடும்வரை ஐலிமரியாம் தேசாலென் பிரதமர் பதவியில் நீடிப்பார் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், எத்தியோப்பியாவில் அவரசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவையில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் நெருக்கடி காரணமாக சமீபத்தில் மாலத்தீவில் அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது எத்தியோப்பியாவிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.