அதிமுகவை அழிக்கும் நோக்குடன் பிரதமர் மோடி செயல்படுகிறார்: தினகரன் பரபரப்பு பேட்டி

அதிமுகவை அழிக்கும் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி
அதிமுகவை அழிக்கும் நோக்குடன் பிரதமர் மோடி செயல்படுகிறார்: தினகரன் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுகவை அழிக்கும் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுகையில், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எந்த லட்சியத்தை முன்னிறுத்தி அதிமுகவை உருவாக்கிக் கட்டிக் காத்தார்களோ, அந்த லட்சியம் நிறைவேற வேண்டும் என்பதுதான் நான் தர்ம யுத்தத்தை தொடங்கியதன் முக்கிய காரணம். இந்த கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த நானும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் லட்சியப் பயணம் தொடங்கியுள்ளோம். 

கடந்த 1980-ஆம் ஆண்டு அதிமுவில் வார்டு செயலராக எனது பணியை தொடங்கியவன். அதிமுக தொடங்கியபோது கைப்பிள்ளையாக இருந்தவர், தற்போது என்னை கட்சிக்கு அறிமுகப்படுத்தியதாக கூறிக் கொள்கிறார். இவர்களால் கட்சியில் எனக்கு ஏற்பட்ட இன்னல்கள் வேறு எவருக்கேனும் ஏற்பட்டிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் அல்லது கட்சியே வேண்டாம் என்று விட்டு விலகியிருப்பார்கள். அவற்றையெல்லாம் முறியடித்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் லட்சியம் வெல்ல நான் மேற்கொண்ட தர்ம யுத்தத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது.

அதிமுக அணிகள் இணைப்புக்கு முன் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். "தற்போதுள்ள சூழலில் கட்சியை காப்பாற்ற நீங்கள் இணைய வேண்டும்' என்று அவர் ஆலோசனை வழங்கினார். அணிகள் இணைப்பில் எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன். அதற்கு அவர், "நீங்கள் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும்' என்றார். என் உடன் இருந்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் இதே வேண்டுகோளையே வைத்தனர். அதனால்தான் தற்போது அமைச்சரவையில் உள்ளேன்.

ஜெயலலிதா எனக்கு இருமுறை முதல்வர் பதவி வழங்கினார். அந்த பெருமையும், அதிமுகவில் கட்சித் தொண்டனும் முதல்வராகலாம் என்ற எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதாவின் லட்சியம் வென்ற பெருமிதமும் எனக்கு போதுமானது என்று பேசிய நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மீண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், பிரதமர் மோடி சொல்லித்தான் கட்சியில் இணைந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்மையை உலறிவிட்டதாகக் கூறியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன், அவர் பாஜகவின் முகவர் போன்று பன்னீர்செல்வம் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.  

மேலும் அதிமுகவை அழிக்கும் நோக்குடன் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்றவர் தங்கள் குடும்பத்தினர் தற்கொலைக்குத் தூண்டியதாக ஓபிஎஸ் கூறிய குற்றச்சாட்டை மறுத்த தினகரன், ஜெயலலிதா இறந்தவுடன் சசிகலாவை முதல்வராக்க முன்மொழிந்தவர் இதே ஓ.பன்னீர்செல்வம் தான். சசிகலா முதல்வர் ஆகியிருந்தால் யாரும் தடுத்திருக்க முடியாது என்றவர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியவர் சசிகலா தான் என்று கூறினார்.

மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். அமைச்சர்களை சேர்த்து கொண்டால் மக்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள். பாஜகவின் தூண்டுதலால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை துவங்கினார் என தினகரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com