சென்னை: தமிழகத்தில் ரஜினி பணியாற்ற ஒன்றும் இல்லை; நாங்கள் பார்த்து கொள்கிறோம். மண்ணின் மைந்தரான கமலுக்குத்தான் முன்னுரிமை; ரஜினிக்கு அல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சீமான கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இருவரின் சந்திப்புக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மண்ணின் மக்கள் ஏற்க கூடிய தலைவரான கமல், என்னை சந்திக்க வருவதாக கூறினார். அதனால் எனது சகோதரரான கமலை நான் வந்து சந்திப்பதே மரியாதை என்பதால், கட்சி தொடங்கும் கமல்ஹாசனின் பயணம் புரட்சிகரமானதாக, வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தேன்.
இருவரும் இணைந்து பணியாற்றுவதை காலம் தான் பதில் சொல்லும் என்றவர் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படாதா? என மக்கள் ஏங்குகின்றனர் என்ற சீமான், தமிழகம் மிக மோசமான சூழலில் உள்ள நிலையில், மாற்றத்தை கொண்டுவர நடிகர் கமல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம் தான் முடிவு செய்யும்.
கமல்ஹாசன் என்னை சந்திக்க விரும்பினார் அதனால் நான் அவரை சந்தித்தேன் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க விரும்பினால் அவரையும் சந்திப்பேன். மக்களுக்கு நன்மை செய்வதே இருவரின் நோக்கம்.
மேலும் திராவிட அரசியலாக இருந்தால் கமல்ஹாசனுடன் இணையமாட்டேன் என்ற சீமான், தமிழகத்தில் ரஜினி பணியாற்ற ஒன்றும் இல்லை; நாங்கள் பார்த்து கொள்கிறோம். மண்ணின் மைந்தரான கமலுக்குத்தான் முன்னுரிமை; ரஜினிக்கு அல்ல என்று தெரிவித்தார்.
நாளை கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்க உள்ள நிலையில், சீமானின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.