ஜெயலலிதா ரத்தமாதிரி இருக்கிறதா?: அப்பல்லோ மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெயலலிதா மகள் என கூறிய அம்ருதா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா ரத்தமாதிரி இருக்கிறதா? என அப்பல்லோ மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம்
ஜெயலலிதா ரத்தமாதிரி இருக்கிறதா?: அப்பல்லோ மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெயலலிதா மகள் என கூறிய அம்ருதா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா ரத்தமாதிரி இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுகுறித்து  மார்ச் 7க்குள் பதில் அளிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது. 

பெங்களூருவைச் சேர்ந்த எஸ்.அம்ருதா, எஸ்.எஸ்.லலிதா மற்றும் ரஞ்சனி ரவீந்திரநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அம்ருதா என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள். நாங்கள் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்கள். எங்கள் குல வழக்கப்படி, அவருக்கு இறுதிச் சடங்கு செய்யவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும். அம்ருதா அவரது மகள் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடவும் இறுதிச் சடங்கு மரியாதைகளைச் செய்யவும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். 

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடந்த 2-ஆம் தேதியும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்றும் பதில் மனுதாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்து அம்ருதா தொடர்ந்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இருவரும் வலியுறுத்தினர். 

இந்த மனு மீதான விசாரணை மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஜெயலலிதாவின் ரத்தமாதிரிகள் மற்றும் உயிரியல்(டிஎன்ஏ) மாதிரிகள் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அம்ருதா குறித்த கடந்த 30 ஆண்டு விவரங்களை சேகரிக்க வேண்டியிருப்பதால், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணன் காலஅவகாசம் கேட்டார். அப்போது அம்ருதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரகாஷ், டிஎன்ஏ உள்ளிட்ட சோதனைகளுக்கு தங்கள் தரப்பு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் மருத்துவமனை நிர்வாகத்தை எதிர்மனுதாரராகவும் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம், மார்ச் 7-ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நடந்த விசாரணையின் போது, ஜெயலலிதாவை தாய் என உரிமை கோரும் மனுதாரர், அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதைப் போல் சோபன்பாபுவை தந்தையென ஏன் உரிமை கோரவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com