ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டத்தில் திருமணத்தின் போது வழங்கப்பட்ட பரிசு பொருளில் இருந்த குண்டு வெடித்ததில் பாட்டி மற்றும் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலம், பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்த சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து புதன்கிழமை அன்று (பிப்.21) நடந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுமண தம்பதியினருக்கு நண்பர்கள், உறவினர்கள் என பலரும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதியினர் நேற்று வெள்ளிக்கிழமை ஆவலுடன் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பரிசு பொருளை பிரித்தபோது யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த பரிசு பொருள் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது.
இதில், புது மாப்பிள்ளையின் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புது மாப்பிள்ளை சேகர் சாஹூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மணமகள் ரீமா சாஹூ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்நாகர் போலீஸார், பரிசு பொருளில் வெடிகுண்டு வைத்தவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுமண தம்பதியினருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருளில் மர்ம பொருள் வெடித்து புது மாப்பிள்ளையும் பாட்டியும் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.