முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடக்க விழா நடந்தது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி மகளிருக்கான இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். முன்னதாக 70 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை மோடி துவக்கி வைத்தார். இதையடுது துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினர்.
பின்னர் அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம் என்று தமிழில் பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி. தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன், பெண்கள் படித்தால் குடும்பமே கற்றதாக அர்த்தம் என்று தமிழில் சில வார்த்தைகள் பேசினார்.
இதையடுத்து ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. சாமானியர்களுக்கு அதிகாரமளித்தலை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன அரசுகள். முத்ரா யோஜனா திட்டத்தில் பலனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். பெண் தொழில் முனைவோர்களுக்கு 10 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்குகிறோம்.
பெண்களுக்கு பேறுகால விடுப்பை 7 வாரத்தில் இருந்து 12 வாரமாக அதிகரித்துள்ளோம். மூன்றரை கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழகம் அதிக அளவில் பலனடைந்துள்ளது.
சுகாதாரம், விவசாயிகள் நலன் ஆகியவற்றை இலக்காக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் மூலம் 29 கோடி எல்.இ.டி பல்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் கரியமலவாயு மாசு குறைந்துள்ளது.
பாஜக கூட்டணி அரசு பதவியேற்றப் பிறகு ஏராளமான மரபுசாரா எரிசக்தி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சூரிய மின்சக்தி, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசை விட அதிக நிதியை திட்டக் கமிஷனில் இருந்து பெற்று தந்தோம். எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாநில அரசுடன் இணைந்து உயர்த்துகிறோம் என்று குறிப்பிடார்.