ராய்ப்பூர்: தூய்மையான இந்தியா திட்டத்தின் தூதுவராக களப்பணி ஆற்றிய மூதாட்டி குன்வர் பாய்(106) காலமானார்.
சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரியைச் சேர்ந்த குன்வர் பாய் என்ற மூதாட்டி கடந்த 2016-ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்டுவதற்காக தான் வளர்த்து வந்த தனது ஆடுகளை விற்று கழிப்பறை கட்டியதற்காக நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு பாராட்டைப் பெற்றார்.
இதனையடுத்து குர்பாத் கிராமத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் அவர் பாராட்டப்பட்டார், பின்னர் பிரதமர் மோடி அவரை தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நியமித்தார்.
106 வயதான குன்வர் பாய் உடல்நிலை குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு தம்தாரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இவர் வசித்து வந்த தம்தாரி மாவட்டம் கோடபாரி கிராமத்தில் உள்ள 18 வீடுகளிலும் தற்போது கழிப்பறை கட்டப்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.