கொல்கத்தா: முத்தலாக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற பெண்களில் முக்கியமானவராக கருதப்படும் இஷ்ரத் ஜஹான் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமியர்களின் மத நம்பிக்கை படி தலாக் என்ற வார்த்தையை மூன்று முறை கூறி விட்டால் திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக கருதப்படுகிறது.
முத்தலாக்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஐவரில் ஒருவரான இஷ்ரத் ஜஹான் ஹவுராவின் கணவர் 2014-இல் 'தலாக்' என்று மூன்று முறை சொல்லி துபையிலிருந்து தொலைபேசியில் விவாகரத்து செய்தார்.
இந்நிலையில், இந்த நடைமுறையை எதிர்த்து கொல்கத்தாவை சேர்ந்த இஷ்ரத் ஜஹான் ஹவுரா உள்பட பெண்கள் சிலரும், பெண்கள் அமைப்பும் ஆகஸ்ட் 22-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த முறை சட்டவிரோதம் என்றும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்றும் இதற்கு தடை விதித்து தீர்ப்பளித்ததுடன், இது தொடர்பாக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என யோசனை கூறியது.
இதையடுத்து முத்தலாக் தொடர்பான புதிய தடை சட்டத்தை தற்போது நடைபெற்று வரும் மக்களவையின் குளிர்க்கால கூட்டத்தொடரில் சட்டமாக நிறைவேற்றியது. இதனை பல இஸ்லாமிய பெண்கள் வரவேற்று மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்ந்து வெற்ற பெற்ற பெண்களில் ஒருவரான இஷ்ரத் ஜஹான் பாஜகவில் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மாநில பாஜக பொது செயலாளர் சயந்தன் பாசு கூறுகையில், இஷ்ரத் ஜஹான் ஹவுரா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இணைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் வசித்து வரும் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததாகவும், இதன் காரணமாகவே பாதுகாப்பு கருதி பாஜகவில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. மத கட்டுப்பாடுகளையும், மத சட்டங்களுக்கு எதிராகவும் தீர்ப்பு பெற காரணமாக இருந்தார் என்று இஷ்ரத் மீது மதவாதிகள் சிலர் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.