புதுதில்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பணம் வழங்கும் நடைமுறை சுயமான நிதியாகவும், வெளிப்படை தன்மை மிக்கதாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் இது குறித்து ஆலோசனை கூறலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் "தேர்தல் நிதிக்கு பத்திரங்கள் அவசியமானது ஏன்" என்ற தலைப்பில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடை மற்றும் அதன் செலவுகள் செய்யும் பணத்திற்கு அடையாளங்கள் எதுவும் காணப்படாத நிலையில், அது ரகசியமாகவே உள்ளது. அரசியல் கட்சிகள் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்கள் போன்றோர்களிடமிருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்தும் அறிவிக்கப்படுவதில்லை. இதன் மூலம் கறுப்பு பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வெளிப்படை தன்மை என்பது முற்றிலும் இல்லை. இதனை மாற்றி அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கவதில் வெளிப்படை தன்மையை கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மிக முக்கியமான பிரிவாக தேர்தல் இருந்தபோதிலும்கூட, நாட்டில் வெளிப்படையான அரசியல் நிதி அமைப்பு இல்லை. பல நூற்றாண்டுகளாக அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படை தன்மை கொண்டு வர இந்தியாவால் முடிவதில்லை.
அரசியல் கட்சியினரிடம் இருந்து வரும் பின் விளைவுகளால் அரசியல் கட்சியிடம் நன்கொடை வழங்கியதற்கான நன்கொடை விவரங்களை வெளியிட நன்கொடையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, தற்போது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் தற்போதுள்ள நேரடியாக பணம் வழங்குவதற்கும், செக், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அல்லது தேர்தல் நிதி பத்திரங்கள் ஆகியவற்றிற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும்.
செக், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மற்றும் தேர்தல் நிதி பத்திரங்கள் முறையில் நேர்மையான நிதி மட்டுமே வரும். இதில் முதல் இரண்டு முறை முற்றிலும் வெளிப்படை தன்மையானது. தேர்தல் நிதி பத்திர திட்டம் என்பது, வெளிப்படை தன்மையில், தற்போதுள்ள திட்டத்திற்கு சற்று மேம்பட்டது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் வெளிப்படை தன்மை கொண்டு வரும் திட்டத்தை பலப்படுத்த அனைத்து தரப்பினரின் கருத்தை பெற மத்திய அரசு விரும்புகிறது என ஜேட்லி கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த ‘தேர்தல் நிதிப் பத்திரம்’ திட்டத்தை கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கான விதிகள், நெறிமுறைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கலாம். அதன்படி ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட 10 நாட்கள் என மொத்தம் 40 நாட்கள் தேர்தல் நிதி பத்திரங்கள் விற்கப்படும். பொதுத் தேர்தலின்போது கூடுதலாக 30 நாட்கள் பத்திரங்கள் விற்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.