புதுதில்லி: உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய வரலாற்றிலே இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது.
சில மாதங்களுக்கு முன்பு முக்கிய விவகாரம் ஒன்றில் 4 நீதிபதிகள் கையெழுத்திட்டு கடிதம் அளித்தோம். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு கொண்டு சென்ற சில விவகாரங்கள், நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
தலைமை நீதிபதி முடிவுகளை தன்னிச்சையாகவே எடுக்கிறார் என்றும் மற்ற நீதிபதிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் நீதித்துறைக்கு எங்களைபோன்ற மூத்த நீதிபதிகளே பொறுப்பானவர்கள் என்பது எங்கள் கருத்து என்று தெரிவித்தனர்.
மேலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடு தான் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
நாங்கள் கொடுத்த கடிதத்தின் பிரதிகளை ஊடகங்களுக்கு கொடுக்கிறோம். அந்த கடிதத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. எங்களுக்காக மட்டுமே நாங்கள் இப்போது பேசினோம் என உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.
எங்களது கவலைகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவும், உச்சநீதிமன்றத்தை பாதுகாப்பது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.
நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திப்பதையொட்டி உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் வழக்கு விசாரணையை முடித்து கொண்டுள்ளன.
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இப்படி தலைமை நீதிபதி மீது பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.