கண்ணில் மிகவும் அரிதான, உருண்டைப் புழு நோய்த் தாக்கி பார்வைக் குறைபாட்டால் சிரமப்பட்டு வந்த 6 வயது குதிரைக்கு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன முறையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் குதிரை குணமடைந்தது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தினமும் 60 முதல் 95 சிறிய மற்றும் பெரிய கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. யானை, குதிரை உள்ளிட்ட பெரிய அளவிலான கால்நடை அறுவை சிகிச்சைகளுக்கும் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கால்நடை வளர்ப்போர் இந்த கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை எடுத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவருக்குச் சொந்தமான குதிரைக்கு கடந்த ஒரு வாரமாக கண்ணில் உருண்டைப் புழு நோய்த் தாக்கியது தெரியவந்தது. அந்தக் குதிரையின் கண்ணில் உருண்டைப் புழு வளர்ந்து விட்டதால், அதன் பார்வை தெரிவதில் சிரமப்பட்டு வந்தது.
இதனையடுத்து, அந்தக் குதிரையை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அப்போது இந்த நிலையத்தின் சிகிச்சைத் துறை கால்நடை மருத்துவர் கதிர்வேல் தலைமையில், கால்நடை மருத்துவர்கள் ஜெயக்குமார், குமரேசன், சங்கர், நெப்போலியன் உள்ளிட்ட குழுவினர், அந்தக் குதிரைக்கு சிகிச்சை அளித்தனர்.
குதிரைக்கு மயக்க மருந்து செலுத்தி, அதிநவீன கருவிகள் கொண்டு உருண்டைப் புழு அகற்றப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த மிகவும் நுட்பமான இந்த அறுவை சிகிசைக்குப் பிறகு, குதிரை நல்ல பார்வைத் திறனுடன் நடந்து சென்றது.
பொதுவாக, குதிரைகளுக்கு புழுத் தடுப்பு மருந்துகள் கொடுத்தால் இதுபோன்ற நோய் தாக்காது. இந்தக் குதிரைக்குத் தேவையான புழுத் தடுப்பு மருந்துகள், உரிமையாளரிடம் அளிக்கப்பட்டு, 3 நாள் தொடர் கண்காணிப்பில் நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் அதனை வைத்து பராமரிக்க உள்ளனர்.