உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் பார் கவுன்சில் குழுவினர் சந்திப்பு

"உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன' என்று
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் பார் கவுன்சில் குழுவினர் சந்திப்பு

புதுதில்லி: தில்லியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பார் கவுன்சில் குழுவினர் சந்தித்து பேசினர். 

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது தலைமை நீதிபதியின் செயல்பாடு குறித்து செலமேஸ்வர் உள்ளிட்ட நீதிபதிகள் மறைமுகமாகக் குற்றம்சாட்டினர். வழக்குகளை ஒதுக்குவதில் அவர் பாரபட்சம் காட்டுவதாகவும், மூத்த நீதிபதிகளான தங்களைத் தாண்டி வேறு நீதிபதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை அவர் ஒதுக்குவதாகவும் அவர்கள் கூட்டாக குறைகூறினர். 

"உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன' என்று நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும், எனினும் தங்கள் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அவர்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தையும் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளும் வெளியிட்டனர்.  உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ளமூத்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், அரசியல் கட்சிகள் கவலையை வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில், மூத்த நீதிபதிகளிடையே சமரசம் ஏற்படுத்துவதற்காக 7 பேர் கொண்ட குழுவை பார் கவுன்சில் நேற்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் அமைத்தது. 

அந்தக் குழுவானது, தலைமை நீதிபதி மற்றும் அவரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளைத் தவிர, உச்ச நீதிமன்றத்தின் மற்ற அனைத்து நீதிபதிகளையும் சந்தித்து, பேச்சு நடத்தி சமரசத்தில் ஈடுபடுவார்கள் என்றும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளை வலியுறுத்தும் தீர்மானத்தை தாங்கள் இயற்றியதாகவும் மனன் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த குழுவானது நீதிபதி செல்லமேஸ்வரின் இல்லத்திற்கு சென்று அவருடன் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்த சமரச குழுவினர், அதிருப்தி மூத்த நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளை தலைமை நீதிபதியிடம் தெரிவித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே இந்த விவகாரம் குறித்து கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி குரியன் ஜோசஃப், தற்போது சில பிரச்சனைகள் எழுப்பப்பட்டு இருப்பதாகவும், இவை அனைத்தும் விரைவில் சரியாகும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com