சேலம்: ஊடகங்கள் தான் தினகரனை தூக்கிப்பிடிக்கின்றன என்றவர் நாங்கள் பேசினால் இரண்டு நிமிடம் காட்டுகிறீர்கள் அவரை 40 நிமிடம் காட்டுகிறீர்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
முதல்வர் பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று நாம் வாதாடிக்கொண்டிருக்கிறோம். அதன் தீர்ப்பு 4 வாரத்தில் தீர்ப்பு அளிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அது நமது விவசாய மக்களுக்கு நல்லதொரு தீர்ப்பாக அமையும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
சித்தராமையாவுக்கு கடிதம்: தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ள காரணத்தால் டெல்டா பாசன விவசாயிகளுக்கு முழுமையான நீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய மே மாதம் வரை கிடைக்க வேண்டிய 80 டிஎம்சி தண்ணீரில் முதற்கட்டமாக 15 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரி கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 7 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற இயக்கம்: நாடாளுமன்றத்தில் முத்தலாக் பிரச்சினையை நாங்கள் தான். மதச்சார்பற்ற, உயிரோட்டம் உள்ள ஒரு இயக்கம் அதிமுக. அதில் எந்த வேறுபாடும் கிடையாது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கட்சியை உடைக்க பார்த்தார்கள், ஆட்சியை கவிழ்க்கப் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதனால் எதையாவது சொல்கிறார்கள். எங்கள் இயக்கம் மதச்சார்பற்ற இயக்கம் தான்.
ஜனநாயக நாடு: கமல்ஹாசன் தொடங்கவுள்ள சுற்றுப்பயணம் பற்றியெல்லாம் பதில் சொல்ல முடியாது. இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், ஒரு சில இயக்கங்கள் தான் நிலைத்து நிற்கிறது. அது அதிமுக தான். வைரமுத்து பிரச்சினை பெரும் பிரச்சினை, அதை இந்த நேரத்தில் பேசுவது சரியாக இருக்காது என்றார்.
தினகரனே சுயேச்சை: கர்நாடகா பேரவைத் தேர்தல்: கர்நாடகாவில் தேர்தல் அறிவித்த பின்னர் அதிமுக வேட்பாளர் யார் என்று முடிவு செய்வோம். தினகரன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் அவர் என்ன பெரிய கட்சியா நடத்துகிறார். அவரே சுயேட்சை வேட்பாளர். அவர் ஆர்.கே.நகரில் எப்படி வென்றார் என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் தான் (ஊடகங்கள்) அவரை தூக்கிப்பிடிக்கிறீர்கள். அவரை ஜெயலலிதா 10 ஆண்டுகள் வீட்டு பக்கமே வரக்கூடாது என்று கூறியிருந்தார். அதன் பின்னர் கட்சியை விட்டு நீக்கிவிட்டார்.
ஊடகங்கள் நாங்கள்பேசினால் இரண்டு நிமிடம் தான் காட்டுகிறீர்கள், தினகரன் பேசினால் 40 நிமிடம் காட்டுகிறீர்கள். உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்தி காட்டுகிறீர்கள் என்று கூறினார்.