சென்னை: பணமதிப்பு நீக்கம், கறுப்பு பண ஒழிப்பு மூலம் நாட்டை காப்பாற்றியுள்ளது பாஜக அரசு என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகடமியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.
மூத்த பத்திரிக்கையாளர் சோ விட்டு சென்ற பணிகளை குருமூர்த்தி போன்ற சிலரால் மட்டுமே கையாள முடியும். ஊழல் ஒழிப்புக்கான மிக முக்கிய நடவடிக்கை தான் பணமதிப்பு நீக்கம். கடினமான மனநிலையில் தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பணமதிப்பு நீக்கம், கறுப்பு பண ஒழிப்பு மூலம் நாட்டை பாஜக அரசு காப்பாற்றியுள்ளது. ஒரு குடும்பமே நாட்டை ஆட்சி செய்து கைப்பற்றி வைத்திருந்தது. மோடி ஆட்சிக்கு முன் இருந்த அரசு மக்களுக்கு உதவாத அரசாகவே இருந்தது.
பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பொருளாதாரத்தில் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் சமூக, பொருளாதார கட்டமைப்பில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்.
நாட்டில் எதிர்புணர்வை தூண்டுவது சில சூழ்ச்சி சக்திகள் தான். நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என குரல் கொடுப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது என ஜேட்லி தெரிவித்தார்.