புதுதில்லி: தலைமை நீதிபதியின் செயல்பாடு குறித்து மறைமுகமாகக் குற்றம்சாட்டிய நான்கு மூத்த நீதிபதிகளின் பெயர்கள் அரசியல் சாசன அமர்வில் இடம்பெறவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர்.
அப்போது தலைமை நீதிபதியின் செயல்பாடு குறித்து செலமேஸ்வர் உள்ளிட்ட நீதிபதிகள் மறைமுகமாகக் குற்றம்சாட்டினர். வழக்குகளை ஒதுக்குவதில் அவர் பாரபட்சம் காட்டுவதாகவும், மூத்த நீதிபதிகளான தங்களைத் தாண்டி வேறு நீதிபதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை அவர் ஒதுக்குவதாகவும் அவர்கள் கூட்டாக குறைகூறினர்.
"உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன' என்று நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள மூத்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிக முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தீபக் மிஸ்ரா உள்பட 5 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிக முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் இந்த அமர்வில், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்விகார், சந்ராசுத், அசோக்பூஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வழக்குளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் இருப்பதாக கூறிய மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோரில் யாரும் இந்த அமர்வில் இடம் பெறவில்லை என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு ஆதார் வழக்கு, ஒரினச் சேர்க்கை எதிரான சீராய்வு மனு, சபரிமாலையில் பெண்களை அனுமதிக்ககோரும் வழக்குகளை விசாரிக்க உள்ளது.