மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி ஒரு மணிநேரம் நீட்டிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உள்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வாடிவாசலில் இருந்து முதல் காளை அவிழ்த்துவிடப்பட்டது. போட்டியில் ஆயிரம் காளைகள், 1241 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையருக்கு முதல்வர் பழனிசாமி சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. இதேபோன்று அடங்காத காளைக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அலங்காநல்லூரில் காளையர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்தனர்.
ஜல்லிக்கட்டில் வீட்டுப் பிள்ளை போல் காளைகள் பார்த்துக் கொள்ளப்படுவதாகவும், காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை என அலங்காநல்லூரில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.