மதுரை: ஜல்லிக்கட்டு இருக்கும் வரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும் என ஜல்லிக்கட்டு போட்டியின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இருவரும் தனி மேடையில் அமர்ந்து போட்டியை ரசித்தனர்.
போட்டியின் இடையே முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், “ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக நாம் கருதுகிறோம். இந்த விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை. காளைகளை குழந்தைகள் போன்று அதன் உரிமையாளர்கள் வளர்க்கிறார்கள். இந்த வீர விளையாட்டு உலகமே போற்றும் அளவுக்கு சிறக்க வேண்டும்” என்றார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தடைகளை உடைத்து சட்டப் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், ஜல்லிக்கட்டு இருக்கும் வரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும் என்று கூறினார்.