புதுதில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள யூசிஎம்எஸ் கல்லூரியில் எம்.எஸ் முதுகலை படித்து வந்த மாணவர் சரத்பிரபு அங்குள்ள விடுதியின் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள யூசிஎம்எஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ் முதுகலை படித்து வந்தார். நண்பர்களுடன் அறையில் தங்கி படித்து வந்த சரத் பிரபு இன்று கழிவறையில் சடலமாக காணப்பட்டார். சக மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த வந்தபோது அவரது சடலத்தை பார்த்து அதிர்ச்சி அந்தனர். இதுகுறித்து நிர்வாகத்திடமும், அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தில்லி போலீஸார் மாணவர் சரத் பிரபுவின் சடலத்தை கைப்பற்றிய வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கழிவறையில் தனக்கு தானே இன்சுலின் ஊசி செலுத்திக் கொண்டு சரத் பிரரபு இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எய்ம்ஸ் கல்லூரியில் படித்த தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர் கடந்த 2016-ஆம் ஆண்டு விஷ ஊசி போட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீண்டும் இன்று தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மாக உயிரிழந்துள்ளது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு படிக்கச் செல்லும் தமிழக மாணவர்கள் மர்மமான முறையிலும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவம் பொற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.