சென்னை: சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகம் மூலம் 806 வழித்தடங்களில் 3,700க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக 50 லட்சம் பேர் பயணித்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக ரூ.50 கட்டணம் கொண்ட ஒரு நாள் பயணச்சீட்டு மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த பயணச்சீட்டை காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை பயன்படுத்தலாம். ஒரே நாளில் 3 அல்லது 4 பேருந்துகள் மாறிச் செல்வோர் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு இந்த பயணச்சீட்டு பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் சராசரியாக 5 லட்சம் பேர் இந்த பயணச்சீட்டை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், ரூ.50 டிக்கெட் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தொலைதூரம் பயணம் செய்வோர் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.