வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு சிறையில் இருந்து சசிகலா பதில் அளித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா-இளவரசியின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஜெயலலிதா வாழ்த வீடான போயஸ் தோட்டத்திலும் வருமானவரித்துறை கடந்த நவம்பர் 17-ம் தேதி சோதனை நடத்தினர். இதையடுத்து திவாகரன் மற்றும் விவேக்கின் சகோதரி கிருஷ்ண பிரியா ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பட்டது. ஜெயா டி.வி முதன்மை செயல் அதிகாரி விவேக் நேரில் ஆஜராக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. விவேக்கின் மற்றொரு சகோதரி ஷகிலாவும், அவரது கணவர் ராஜ ராஜசோழனும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள்.
வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல் சசிகலாவுக்கு வருமானத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் தான் மெளன விரதம் இருப்பதால் வருமானவரித்துறை விசாரணைக்கு ஆஜராக இயலாது என்று சசிகலா கூறியுள்ளார். பிப்.10-ம் தேதி வரை விசாரணைக்கு ஆஜராக இயலாது என்றும் கடிதத்தில் சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.