புதுதில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரண விவகாரம் குறித்து பாஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி, தில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது மரணம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தில்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். ஆனால், அம்மனு கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மேல்முறையீடு செய்தார். அம்மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நேரில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, “நான் அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகி உள்ளேன்” என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், “இந்த குற்றச்சாட்டின் தகுதி குறித்து விசாரிப்பதற்கு முன்பாக, இந்த மனுவின் முகாந்திரம் குறித்து நாங்கள் திருப்தி அடைவது அவசியம். எனவே, மனுவில் முகாந்திரம் குறித்தும் போலீஸார் விசாரணையை குறித்து முதலில் வாதிடுங்கள், அதுகுறித்து வாதிட முடியுமா” என்று கூறி, 3 வாரங்களுக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தனர்.