புதுதில்லி: 2014-இல் சுஷ்மா சுவராஜ் பிரதமராகி இருக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ப.சிதம்பரம் எழுதியுள்ள கட்டுரையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து வரும் சுஷ்மா சுவராஜ், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை சிறப்பாக செய்து வருகிறார்.
அவர், 2009 முதல் 2014-ஆம் ஆண்டு வரை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் என்றும் அப்போது அவரது கட்சி வெற்றிபெற்றிருந்தால், அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இயற்கையாக பிரதமர் பதவிக்கு வரவேண்டிய சுஷ்மாவை வரவிடாமல், அதீத ஆற்றல் மற்றும் அரசியல் தந்திரம் மிக்க ஒருவர் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும், அவரை எதிர்த்து அத்வானியுடன் சேர்ந்து சுஷ்மாவும் போராடி, அதில் தோல்வியையே கண்டனர் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு வந்தாலும், அந்தப் பதவியில் இப்போதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆனால், இதைக்கூட சில நேரங்களில் பிரதமர் அலுவலகம் ஆள்கிறது.
மேலும், அறிவாற்றல் மிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தனது பணிகளை சிறப்பாக செய்து வருவதாகவும், வெளிநாட்டில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது, மருத்துவம் பார்த்துக்கொள்வதற்காக பாஸ்போர்ட், விசா அல்லது இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற உதவி கேட்பவர்களுக்கு உதவுவது, கடத்தப்பட்டவர்களை மீட்பது, சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிப்பது போன்ற உதவிகளை கருணையுடன் சிறப்பாக செய்து வருவதால், மக்கள் சுஷ்மாவின் கருணையை காதலிக்க விரும்பிகின்றனர் என்றும் உதவும் குணம் மிக்க இவர் போன்ற தலைவர்கள் நாட்டுக்குத் தேவை எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சுஷ்மாவை சிலர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள் என்று புகார் வருகிறது. ஆனால், அது வேறுயாருமல்ல, பாஜகவின் சொந்த படைதான் அது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நாள்தோறும் செயல்பட்ட அந்த படைதான் சொந்த தலைவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் வழக்கமாக கட்டவிழ்த்துவிடப்படும் அதே இராணுவத்திற்கு அந்த ட்ரால்கள் சொந்தமானவை என்பது தெளிவாயிற்று," என்று கூறிப்பிட்டுள்ள சிதம்பரம், எதிர்க்கட்சிகளுடன் மோதல்போக்கு வராமல் சுஷ்மா தவிர்த்துவிடுவது அவருக்கு உதவுகிறது என்று அந்த கட்டுரையில் சிதம்பரம் எழுதியுள்ளார்.