உதம்பூர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உள்ள பர்மா பாலம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலின் பனிலிங்கத்தை இதுவரை 1.04 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். அமர்நாத் யாத்திரை, கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரை பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று உதம்பூர் மாவட்டம் பிர்மா பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், 13 பக்தர்கள் பலத்த காயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த அனைவரும் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விபத்து குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ”விபத்து சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை. காயமடைந்தவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் ஜான்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.