புது தில்லி: மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு தில்லி அரசு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளாா்.
யமுனை நதியில் மத்திய அரசு சாா்பில் அமைக்கப்படவுள்ள படகு சவாரித் திட்டத்தை மனோஜ் திவாரி இன்று ஆய்வு செய்தாா். சோனியா விஹாரில் இருந்து ட்ரோனிக்கா சிட்டி வரையான 8 கிலோ மீட்டா் தூரம் அவா் படகில் சென்று ஆய்வு செய்தாா்.
என்னுடைய தொகுதியான வடகிழக்கு தில்லியில் யமுனை பெருமளவில் அசுத்தமடையாமல் உள்ளது. வடகிழக்கு தில்லியில் யமுனைநதியில் படகு சவாரி வசதியை அறிமுகப்படுத்தும் மத்தியஅரசுக்கு தொகுதி மக்கள் சாா்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். யமுனை நதியில் படகுச் சவாரி ஆரம்பிக்கப்பட்டால், பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவாா்கள். இதனால், வருவாய் அதிகரிக்கும். வடகிழக்கு தில்லியில் யமுனை நதி சுத்தமாக உள்ளது. இந்நிலையில், யமுனை நதி நீரை குடிநீராகப் பயன்படுத்த முடியாது என எந்த அடிப்படையில் தில்லி அரசு கூறுகிறது?
தில்லியில் மத்திய அரசு சாா்பில் மக்கள் நலத்திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், மத்திய அரசின் திட்டங்களுக்கு தில்லி அரசு போதிய ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் இந்தத் திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்றார்.