பனாஜி: நூறு கோடி முறை முயற்சித்தாலும் ஆதார் தகவல்களை திருட முடியாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
கோவா மாநிலம், பனாஜியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப நாள் கொண்டாட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்துகொண்டு பேசுகையில், 100 கோடி முறை முயற்சித்தாலும் ஆதார் தகவல்களை திருட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
எனது ஆதார் அட்டையில் என்ன இருக்கிறது? எனது புகைப்படம் உள்ளது. நான் ஒரு ஆண் என்பதும், என் பாட்னா நிரந்தர முகவரியும் உள்ளது. என்னவெல்லாம் இல்லை என்றால், என் மதம், என் வருமானம், என் சாதி, என் ஆரோக்கியம் குறித்த மருத்துவப் பதிவு, பிற தனிப்பட்ட தகவல்கள் இல்லை. ஆதார் பதிவில் எனது கைவிரல் ரேகைப்பதிவுகள், என் கண்ணின் கருவிழிப்படலம் மட்டுமே உள்ளது.
"ஆதார் ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். முற்றிலும் பாதுகாப்பாகனது மற்றும் பத்திரமானது. ஆதார் தகவல்களைப் பாதுகாக்கும் நடைமுறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. போதிய சட்ட ரீதியிலான, அமைப்பு ரீதியிலான, தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்புடன் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கட்டுப்பாட்டில் ஆதார் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை திருட 100 கோடி முறை முயற்சித்தாலும் அவற்றை திருட முடியாது. தோல்வியே மிச்சம் என்று கூறினார்.